சமீபத்திய பதிவுகள்

தேடல்

Calender

<<  September 2010  >>
SunMonTueWedThuFriSat
2930311234
567891011
12131415161718
19202122232425
262728293012
3456789

நித்யானந்தர்: சில குறிப்புகள்

1. நித்யானந்தர் சரஸ வீடியோ வெளிவந்த தினம் மக்களுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சி என்பது உண்மையில் ஒரு ’இன்ப’ அதிர்ச்சியா என்பது ஆராயப்படவேண்டும்.

2. .பி.எல். போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக நிறைய தமிழ்ப் படங்கள் அவசரமாகத் திரையிடப்படுவதைப் போலவே நித்யானந்தர் வீடியோவும் அவசரமாக வெளியிடப்பட்டிருகிறது என்று கருத இடமிருக்கிறது. இல்லாவிட்டால் இதனுடைய டி.ஆர்.பி. ரேட்டிங் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது

3. Voyeurism என்பதற்கு ஒரு செய்தி மதிப்பினை வழங்கி அதன் மூலம் அதை ஒட்டு மொத்த சமூகத்தின் கூட்டு அனுபவமாக மாற்றிய சன் டி.வி குழுமம் தன்னளவில் ஒரு புரட்சியை நிகழ்த்தியுள்ளது. இதுபோன்ற புரட்சிகளை சமூகத்தின் எல்லா தளங்களிலும் இருக்கும் கபடவேடதாரிகள் தொடர்பாகவும் அது மேற்கொள்ளும் என்று நம்புவோம்.

4. வாய்வழி புணர்ச்சி தொடர்பாக தமிழ்ச் சமூகத்தில் நிலவும் மனத் தடைகளை ஒரே மூச்சில் களைந்த நக்கீரன் மற்றும் சன் குழுமம் மிகவும் பாராட்டிற்குரியவர்கள்.

5.
நித்யானந்தர் சரஸ வீடியோ பற்றி ஊடகப் பழக்கமும் தொடர்பும் உள்ள அனைவருமே அநேகமாக கருத்துத் தெரிவித்துவிட்டார்கள். இவர்கள் அனைவரும் மறந்துபோன ஒரு விஷயம், நித்யானந்தர் தான் ஒரு நடிகையுடன் படுக்க மாட்டேன் என்றோ ரஞ்சிதா தான் ஒரு சாமியாருடன் படுக்க மாட்டேன் என்றோ எந்த இடத்திலும் இதற்கு முன் அறிவிக்கவில்லை என்பதைத்தான்.

6. நித்யானந்தரை விமர்சிப்பவர்களில் பெரும்பகுதியினர் அவர்மேல் பொறாமை கொண்டவர்கள் என்று கருத இடம் இருக்கிறது.

7.
சரஸத்தில் ஈடுபடும்போது நித்யானந்தர் டி.வி பார்க்கும் பழக்கம் உள்ளவர் என்று தெரிகிறது. இது பொதுவாக தமிழர்களின் பழக்கம்தான் என்று சமூகவியல் ஆய்வாளராக இருக்கும் எனது நண்பர் ஒருவர் குறிப்பிடுகிறார்.

8. இது ஹிந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்துவதாக நித்யானந்தர் ஆஸ்ரமங்களை எரிப்பவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஒரு பாதிரியோ அல்லது ஒரு முல்லாவோ இத்தகைய காரியத்தில் ஈடுபட்டால் அது கிறிஸ்தவர்களின் அல்லது முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்று அர்த்தமா? மகிழ்ச்சியாக இருப்பவர்களைப் பார்த்துப் புண்படுவதுதான் நம்முடைய வேலையா? உதாரணமாக, ஒரு தமிழ்ப் பெண் எழுத்தாளர் ஒரு பிரபல சினிமா இயக்குனரோடு சரஸமாடி அந்த வீடியோ காட்சியை வெளியிட்டால் அது தமிழ் இலக்கியத்தையோ தமிழ் சினிமாவையோ கேவலப்படுத்தியதாகிவிடுமா? அதற்காக ஒரு தமிழ் எழுத்தாளனாக இருப்பதற்காக நான் புண்படமுடியுமா?

9.
நித்யானந்தரோடு சண்டையிடவேண்டியவர்கள் அவரது சீடர்களே தவிர, ஹிந்துக்களோ அல்லது பொதுமக்களோ அல்ல. ஒரு குடும்பத்தில் ஒருவர் சோரம்போவது எப்படி அந்தக் குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சினையோ, அதேபோலத்தான் ஒரு சாமியார் தான் பரப்பிய கொள்கைகளுக்கு எதிராக சோரம்போவது அவரைப் பின்பற்றுபவர்கள் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சினை. அவருக்குப் பணம் கொடுத்தவர்கள், அவரது காலைக் கழுவிக் குடித்தவர்களுக்கு மட்டுமே நித்யானந்தரைத் தண்டிக்கவோ மன்னிக்கவோ உரிமை உணடு. காமன் மேன்களோ அரசோ இதில் தலையிடுவது நியாயமே இல்லை.

10. ஒருவர் பிரம்மச்சரியத்தைப் போதிப்பதும் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பதும் வேறு வேறு பிரச்சினைகள். மாபெரும் புரட்சிகளே தோல்வியடைந்துவிட்ட உலகத்தில் ஒரு இளைஞனின் பிரம்மச்சரியம் தோல்வியடைவது அவ்வளவு பெரிய பிரச்சினையா? போதனை என்பது ஒரு கருத்து. நித்யானந்தரின் தியானத்தைக்கூட எப்படி ஒருவர் எல்லா சந்தர்ப்பத்திலும் முழுமையாகக் கடைப்பிடிக்க முடியாதோ அதேபோல பிரம்மச்சரியத்தையும் முழுமையாகக் கடைப்பிடிக்க முடியாது.

11.
நித்யானந்தரின் பிடதி ஆஸ்ரமத்தில் முதலில் சோதனையில் ஈடுபட்டவர்கள் வனத்துறை அதிகாரிகள். பெண் வேட்டையாடுபவர் என்று வர்ணிக்கப்படும் நித்யானந்தரின் ஆஸ்ரமத்தில் வனத்துறையினரை விட்டு சோதனையிட்டதன் மூலம் பெண்களை அரசாங்கம் விலங்குகளாகக் கருதுவதாக நம்ப இடமிருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

12. நித்யானந்தரின் சொத்துக்களின் மதிப்பு 5 ஆயிரம் கோடியிலிருந்து 10 ஆயிரம் கோடி வரை என பத்திரிகைகள் மானாவாரியாகத் தகவல் கொடுக்கின்றன. ஒரு இளைஞனால் 32 வயதில் இவ்வளவு பணத்தையும் உலகளாவிய கட்டமைப்பையும் எவ்வாறு உருவாக்க முடிந்தது? பக்தர்கள் கொடுக்கிற காணிக்கையால்தான் இவ்வளவு பணம் சேர்ந்தது என்றால் பில் கேட்ஸ் போன்றவர்கள் நித்யானந்தரின் பகதர்களாக இருக்கிறார்கள் என்று அர்த்தமாகிவிடும். நித்யானந்தரின் கையில் இருக்கும் பணம் யாருடையது என்று தெரிந்தால் சரஸ வீடியோவின் ரிஷிமூலம் தெரிந்துவிடும்.

13.
மடங்களுக்கும் சாமியார்களுக்கும் வரும் பணம் கணக்கிற்கும் கண்காணிப்பிற்கும் அப்பாற்பட்டது என்ற விதியின் மூலமாக ஸ்விஸ் பேங்க்கின் உள்ளூர் முகவர்களாக இதுபோன்ற சாமியார்கள் செயல்படுகிறார்கள் என்றுதான் அர்த்தம். இதில் ஏதாவது பிரசிச்னை வரும்போதோ, தில்லுமுல்லுவில் ஈடுபடும்போதோ அல்லது அரசியல் சூதாட்டங்கள் நடக்கும்போதோ இந்த சாமியார்கள் என்கவுண்டர் செய்யப்படுகிறார்கள். அரசியல்வாதிகள், பணக்காரகளுக்கு வேலை செய்யும் ரவுடிகளின் நிலைதான் இந்தச் சாமியார்களின் நிலையும்.

14. சாமியாரின் சரஸ வீடியோ தமிழர்களின் பாலுணர்வு சார்ந்த பழக்கவழக்கங்களை மிகவும் பாதித்திருப்பதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. இந்த ஆய்வில் பங்கெடுத்த அனைவருமே இந்த நாட்களில் பாலுறவில் ஈடுபடும்போது தாங்கள் ஒரு கேமிராவின் முன் நடிப்பதுபோல் உணர்வதாகக் கூறுகிறார்கள். விரைப்பு நிலையினைத் தக்க வைப்பதற்கான மருந்துகளின் விற்பனை பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

15.
பிரபலமானவர்களின் பாலுறவுக் காட்சிகளை கோடிக்கணக்கான பார்வையாளர்களுக்குக் காட்டுவது சமூக ஒழுக்கத்தைக் காப்பாற்றுவதற்காக. முகம் தெரியாதவர்கள் நடிக்கும் பாலுறவுக் காட்சிகளைக் காட்டுவதுதான் ஒழுக்கக் கேடானது.

16. நித்யானந்தரின் படத்தைச் செருப்பால் அடிக்கும் காட்சிகளைத் திரும்பத் திரும்பக் காட்டிக்கொண்டிருந்தார்கள். இந்தியர்களுக்கு ஒருவன் தலைவனாகவோ கடவுளாகவோ இருப்பதைப் போன்ற ஆபத்தான காரியம் இந்த உலகிலேயே வேறு எதுவும் இருக்க முடியாது.

17. இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை நித்யானந்தர் இவ்வளவு குறுகிய காலத்தில் கட்டி எழுப்பியது பல்வேறு தந்திரவேலைகள் இல்லாமல் சாத்தியமாகியிருக்காது. இவ்வளவு தந்திரமான ஒரு ஆளுக்குத் தனக்கு நெருக்கமான ஒருவரால்தான் படம் பிடிக்கப்படுவோம் என்று தெரியாமல் போய்விட்டது. நித்யானந்தருக்கு மட்டுமல்ல, வீழ்ச்சியடைந்த எல்லா மனிதர்களின் ஒரே பலவீனம் தன் உடன் இருப்பவரை நம்புவதுதான்.

18. .மதுரை தினகரன் அலுவலக எரிப்பையும் இதேபோலத்தான் திரும்பத் திரும்ப டிவியில் காட்டினார்கள். இறந்துபோன மூவரும் ஏசி மெஷின் கோளாறினால் ஏற்பட்ட தீவிபத்தில்தான் இறந்தார்கள் என்று ஒரு மாண்புமிகு நீதிபதி தீர்ப்பளித்தார். ரஞ்சிதா கால் இடறி நித்யானந்தரின் மேல் விழுந்ததைத்தான் தவறாகச் சித்தரித்துவிட்டார்கள் என்று யாராவது தீர்ப்பளிக்கக் கூடும்.

19. நித்யானந்தரின் சீடர்கள், கடவுள்மேல் மனிதர்கள் சொல்லக்கூடிய எந்தப் பழியையும் ஏற்கமாட்டார்கள். கடவுளை அடைவதற்கு பாலின்பமும் ஒரு மார்க்கமே என்று அவர் அறிவித்துவிட்டால் போதும். சீடர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம்

20. பெரும் வர்த்தக நிறுவனங்கள், அரசியல்வாதிகள், சமூக விரோதிகள் சேர்ந்து உருவாக்கும் இந்த கார்ப்பரேட் சாமியார்கள் ஒரு தவிர்க்க முடியாத சமூக விளைவு. பண முதலைகளுக்கு இவர்கள் தேவைப்படுவது போன்றே பற்றிக் கொள்ள ஏதுமற்ற எளிய மனிதர்களுக்கும் தேவைப்படுகிறார்கள்

21. தலைமறைவாக இருக்கும் நித்யானந்தர் பொழுதுபோகாததால் ‘பிரம்மச்சரியம் என்றால் என்ன?’ என்று விளக்கி தமிழ் இணையதளம் ஒன்றில் எழுதப்பட்ட நீண்ட கட்டுரையை ஆர்வமுடன் வாசித்து வருவதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தான் கைது செய்யப்படுவதற்குள் அதை வாசித்து முடிக்கவேண்டுமே என்று இரவு பகலாகத் தூங்காமல் இருக்கிறாராம். நித்யானந்தருக்குத்தான் சோதனை மேல் எத்தனை சோதனை.

உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com