மனுஷ்யபுத்திரனுக்கு
பைத்தியக்கவிதை 2 ரொம்ப பிடித்திருந்தது. திரும்பத் திரும்ப படித்தேன். எனக்கு அது தற்கொலை கவிதையாக படவில்லை. விடுபடல், நிலைமாற்றத்திற்கு முந்தின தருணம் என வேறு பொருள்கள் பட்டன. அப்புறம் அந்த சக்கர நாற்காலி தோன்றும் இடம் ஏற்படும் தாவல் ஆச்சரியப்படுத்தியது. இதை நேரடியாக படிப்பது கவிதை வாசிப்பு அல்ல. இது வேறொரு மனநிலை பற்றியது.
அபிலாஷ்.ஆர்
அன்புள்ள அபிலாஷ்.
உங்கள் கடித்தை ஆர்வமுடன் படித்தேன். இந்த தருணத்தில் உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியத்தைச் சொல்ல விரும்புகிறேன். இதை மற்ற வாசகர்கள் படிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். உண்மையில் பைத்தியக் கவிதை இரண்டை தற்கொலை மனப்பான்மையிலேயே எழுதினேன். எனக்கு மிக நெருக்கமானவர்களால் மனம் கசங்கிபோன ஒரு மாலையில் அதை எழுதினேன். கொஞ்சம் அதற்கு திட்டமிட்டேன் என்றும் சொல்லலாம். ஆனால் மற்றவர்களிடம் அதை ஒப்புக் கொள்ள தைரியமில்லை. ஆனால் வாசகன் அதைத் துல்லியமாக கண்டுபிடித்துவிடுகிறான். நம்மைப் போல அவனிடம் மொழியின் ஆயுதங்களோ தந்திரங்களோ இல்லை. எனவே ஒரு வரியை படித்து மனம் உடைந்து கண்ணீர் சிந்துகிறான். எழுத்தாளன் இந்தக் கண்னீரை தனது தர்க்கத்தின் குரூர சிந்தையால் அவமதிக்கிறான். அதைச் சிதைக்க முற்படுகிறான். அவனிடம் வாழ்க்கையை அவமதிப்பதை தவிர வேறு என்ன இருக்கிறது? அதனால்தான் நான் ஒரு தொழில்முறை கவிஞன் என்று அத்தனை அகம்பாவமாய் சொல்ல முடிகிறது.
மற்றபடி தற்கொலை தொடர்பான படிமங்கள் மிகவும் கவர்ச்சிகரமானவை. மரம் பற்றிய ஒரு கவிதையில் அதில் தூக்கிட்டுக் கொள்பவர்களைப் பற்றியே எழுதியிருக்கிறேன்.
மனுஷ்ய புத்திரன்
உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com